Monday, March 1, 2010

55வது பிலிம்பேர் விருதுகள்

55-வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நடந்தது. விருது வழங்கும் விழாவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானும், சைஃப் அலிகானும் தொகுத்து வழங்கினார்கள்.
இதில் அமீர்கான், மாதவன், ஷர்மன் ஜோஷி நடித்த 3 இடியட்ஸ் இந்திப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த வசனம் மற்றும் சிறந்த படம் ஆகிய 6 பிரிவுகளில் விருதுகளை வென்றது. பா படத்தில் 12 வயது சிறுவனாக நடித்த அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. பா படத்தில் அமிதாப்பச்சனுக்கு அம்மாவாக நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.மும்பை யாஷ் ராஜ் ஸ்டுடியோசில் நடந்த விழாவுக்கு பாலிவுட்டே திரண்டு வந்திருந்தது.
ஆனால், அமிதாப் பச்சன் குடும்பத்தினர் இந்த விழாவைப் புறக்கணித்தனர்.மருமகள் ஐஸ்வர்யா ராய்க்கு இன்னும் குழந்தை பிறக்காததற்கான காரணம் குறித்து, கிசுகிசு எழுதிய மும்பை மிரர் பத்திரிகை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அமிதாப் வலியுறுத்தியிருந்தார். ஆனால், மும்பை மிரர் தரப்பில் மன்னிப்பு கேட்கப்படவில்லை. பிலிம்பேர் குழுமத்தின் ஒரு அங்கம்தான் மும்பை மிரர். ஐஸ்வர்யா செய்தி குறித்து மன்னிப்பு கேட்காததால், பிலிம்பேர் விழாவை அமிதாப் பச்சன் புறக்கணித்தார். அவர் தவிர ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோரும் விழாவுக்கு வரவில்லை.

புறக்கணிப்பு குறித்து பச்சன் தனது பிளாக்கில் குறிப்பிடுகையில்,
'ஐஸ்வர்யா ராயின் உடல் நிலை குறித்து தவறான கருத்துக்களை வெளியிட்ட மும்பை மிரர் மன்னிப்பு கேட்டதாக இதுவரை எங்களுக்கு தகவல் வரவில்லை.பிலிம்பேர் விழாவில் கலந்துகொள்ள முடியாது, ஐஸ்வர்யாவும் விழாவின் எந்த கலை நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்க மாட்டார் என முன்னதாகவே தெரிவித்து விட்டோம்.எங்களுக்கு ஆதராவக பா இயக்குனர் பால்கியும் இந்த விழாவை புறக்கணிப்பார்' என்று கூறியிருந்தார்.அபிஷேக்கும் இதுபற்றி ட்விட்டரில் குறிப்பிடும் போது, 'பிலிம்பேர் விழாவில் நிறைய பேர் வந்து கலந்துகொள்ளுமாறு அழைத்தார்கள். ஆனால் நான் கண்டிப்பாக தவிர்த்துவிட்டேன்.மும்பை மிரர் அவர்களின் நிலையில் உறுதியாக இருக்கிறார்கள். அதுபோல நாங்களும் எங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்

அமீர்கான் நடிப்பில், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்துக்கு 6 பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டன.சிறந்த இயக்குனருக்கான விருது ராஜ்குமார் ஹிரானிக்கும் (3 இடியட்ஸ்), சிறந்த துணை நடிகருக்கான விருது போமன் இரானிக்கும் (3 இடியட்ஸ்), சிறந்த துணை நடிகைக்கான விருது கல்கி கோச்லினுக்கும் (தேவ் டி), சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஏ.ஆர். ரகுமானுக்கும் (டெல்லி 6), சிறந்த பாடலாசிரியருக்கான விருது இர்ஷாத் கமிலுக்கும் (ஆஜ்தின் சட்யா, லவ் ஆஜ்கல்) கிடைத்தது.

சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை மோஹித் சவ்கான் (மசகபி, டெல்லி 6), சிறந்த பின்னணி பாடகிக்கான விருதுகளை கவிதா சேத் (இக்தாரா, வேக் அப்சித்), ரேகா பரத்வாஜ் (ஜென்டா போல், டெல்லி 6) ஆகியோரும், சிறந்த கதை, வசனத்துக்கான விருதுகளை அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி (3 இடியட்ஸ்) ஆகி யோரும், திரைக்கதைக்கான விருதுகளை அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி, விது வினோத் சோப்ரா (3 இடியட்ஸ்) ஆகியோரும் சிறந்த எடிட்டிங்குக்கான விருதை ஸ்ரீகர் பிரசாத் (பிராக்) ஆகியோரும் பெற்றனர்.

சிறந்த வாழ்நாள் சாதனையாளருக்கான விருது சசிகபூர், கய்யாம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

விருது வழங்கும் விழாவையொட்டி நடிகர், நடிகைகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.